Sunday, November 28, 2010

My earliest years continued

கடலூரில் புனித சூசையப்பர் பள்ளியில் படிக்கையில் (1953 - 1955 ) நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக்கு கட்டிடங்கள் இல்லை .மேலே தென்னை ஓலை கூரை கீழே மணல். Desk எல்லாம் கிடையாது . சில நாட்களில் பள்ளி வளாகத்தில் உள்ள பெரிய தூங்கு மூஞ்சி மரத்தடியில் வகுப்புகள் நடக்கும்.


அப்பள்ளியில் சிலோனிலிருந்தும் மங்களூரிலிருந்தும் கிருஷ்ணகிரியிலிருந்தும் சேலத்திலிருந்தும் மாணவர்கள் பள்ளிவிடுதியிலிருந்து படித்தனர்.
ஒவ்வொரு தேர்வு முடிந்த பின் விடைத்தாள்களுடன் பிரின்சிபால் (பெரிய சாமியார் ) Fr.ஞானப்பிரகாசம் வந்து குறைந்த மதிப்பெண் வாங்கியவர்களுக்கு பிரம்படி கொடுப்பார். எனக்கும் கிடைத்ததுண்டு. அப்போது உடன் படித்த சிலர் பெயர்கள் :-T.பார்த்திபன், ராமநாதன், சிவப்பிரகாசம், L.விக்டர் ,கனகராஜ் என்ற ஆசிரியரின் மகன் லாரன்ஸ், தென்னல் கிராமத்தைச்சேர்ந்த வரதன், மந்களூரைச்சேர்ந்த அனாத்தோல்.
அவர்கள் இப்போது எங்கு உள்ளனர் என தெரியவில்லை . அவர்கள் இந்த blogg ஐ ப் பார்த்தால் தொடர்பு கொள்வார்களோ ?!

நாங்கள் தங்கியிருந்த இல்லத்துக்கும் பள்ளிக்கும் சுமார் ஒரு மைல் தூரம் இருக்கும்.காலைச்சிற்றுண்டிக்குப்பின் புத்தகப்பையுடன் நடந்து மஞ்சக்குப்பம் மைதானத்தை கடக்கையில் அங்கிருந்த சுப்புராயலு ரெட்டியார்  பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பீரங்கியைப்பார்த்து வியந்துக்கொண்டும் ராபர்ட் கிளைவ் காலத்து கட்டிடத்தில் இருக்கும் கலெக்டர் ஆபீஸ் மற்றும் சிறைச்சாலை எல்லாம் கடந்து பள்ளியை அடைவோம். மணியடித்துவிட்டிருந்தால் அவசரமாக ஓடி ஆசிரியரின் சீற்றத்துக்கு ஆளாவோம்.


மதியம் சாப்பாடு வீட்டிலிருந்து வேலையாள் வசம் அனுப்பிவிடுவார்கள் .மாலை பள்ளி முடிந்து வழியெல்லாம் விளையடிக்கொண்டே வீடு வந்து சேருவோம். இரவு மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு எட்டு  மணிக்கெல்லாம் படுத்துவிடுவோம்.


ஐந்தாம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையில் எங்கள் சித்திக்கு திருமணம் நடந்து விழுப்புரத்தில் குடியேறினார்கள்.
அடுத்த நான்கு ஆண்டுகள் விழுப்புரம் சித்தி வீட்டில் இருந்து நகராட்சி உயர் நிலைப்பள்ளியில்  படித்தோம். அந்த கால கட்டத்தில் 1957 ம் ஆண்டு இந்திய சுதந்திரப்போராட்ட நுற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.  இந்திய நாணயம் ருபாய் அணா பைசாவிலிருந்த்து ருபாய்  நயா பைசாவுக்கு மாற்றப்பட்டதும் அதே ஆண்டில்தான்
சித்தப்பா மோட்டார் பம்ப் செட், மின் உபகரணங்கள் கடை வைத்திருந்தார் . அடிக்கடி அந்த கடையில் பொழுது போக்குவோம் . அதனால் பொறி இயலில் ஆர்வம் ஏற்பட்டது.   ஒன்பதாம் வகுப்பில் engineering  bifurcated course எடுத்தேன்.
என்னுடன் படித்த ஒரு மாணவர் வயதில் மூத்தவர் .பக்கத்து கிராமத்தில் மருத்துவர் குலத்தைச் சேர்ந்தவர் .அவரும் நாட்டுவைத்தியர் தொழில் செய்துவந்தார் . அடிக்கடி அவர் ஊரைச்சேர்ந்தவர்கள் பள்ளிக்கே வந்து அவரை வைத்தியம், பிரசவம்கூட பார்க்க அழைத்துச்செல்வார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும் .

1959 -1961 ல் கடலூரில் இன்னொரு சித்தி வீட்டில் தங்கி நகராட்சி உயர் நிலப் பள்ளியில் படித்தேன்.அங்கு பொறி இயல் கல்வி இல்லாததால் composite maths எடுத்தேன் .என்னுடன் படித்த ஒரு மாணவன் அழகாக ஓவியம் வரைவான் .பிற்காலத்தில் அவன் கார் திருடுவதில் ஈடுபட்டு சிறை சென்ற செய்தியை படிக்கும்போது வேதனையாக் இருந்தது. பிறகு என்ன ஆனானோ தெரியவில்லை .

S S L C தேர்வு முடிவு வருமுன் எங்கள் தந்தை காலமானார் .
P U C படித்திருந்த அண்ணனும் நானும் இனி படிப்பை தொடர வாய்ப்பில்லை (தந்தையோடு கல்வி போம் ) என எண்ணி கிராமத்தில் விவசாயத்தை பார்க்க ஆரம்பித்தோம் .எனினும் விழுப்புரம் சித்தப்பா என்னை கல்லூரியில் சேர்க்க முயன்றார்
தாமதமான முயற்சி பலனளிக்கவில்லை .

26.1.1962  அன்று என்  முதல் தங்கையின் திருமணம் நடந்ததது .தங்கையின் கணவர் B.A Honors படித்திருந்தார் .அவர் தந்தை அவரை சட்டம் படிக்கச்சொன்னார் . அவர் சட்டக்கல்லூரியில் சேரும்போது என்னையும் விவேகானந்தா கல்லூரியில் P U C யில் சேர்த்தார் .என் பொறி இயல் ஆர்வத்தை விடுத்து மருத்துவம் படிக்கத் தூண்டினார் .
அவர் தூண்டுதலால் கடுமையாக உழைத்து நல்ல மதிப்பெண்கள் பெற்று சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தேன். சில உறவினர்களால் இதை நம்பமுடியவில்லை.

மருத்துவக்கல்லூரி அனுபவங்களை பிறகு தொடர்வேன்.
.

Thursday, November 4, 2010

இளமைக்கால தீபாவளி நினைவுகள்

சிறு வயதில் தீபாவளிக்கு எங்கள் கிராமத்துக்குச்சென்றுவிடுவோம்
முதல் நாளிளிருந்தே பண்டிகைக்கு தயார் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்
வேலைக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் அதிரசம் தோசை வடை எல்லாம் மாலையில் தயார் செய்வார்கள்,
வீட்டிலுள்ள பெண்கள் சிறுமிகள் எல்லாம் முதல் நாள் மாலையே எண்ணைக்குளியல் செய்துவிடுவார்கள். ஆண்கள் யாவரும் தீபாவளி அன்று விடியற்காலை எழுந்து விடுவோம் . எண்ணை தேய்த்து குளிப்பாட்ட ஒரு ஆள் வந்து நன்றாக எண்ணை தேய்த்து
தட தடவென்று தலை  உடல் எல்லாம்  தட்டி வெந்நீர் ஊற்றி  இலுப்பக்கட்டி (soapnut pwder past) தேய்த்து குளிப்பாட்டிவிடுவார்.சுகமாக இருக்கும். பிறகு புத்தாடைகள் அணிந்து
 சூரிய உதயத்துக்கு முன் சிற்றுண்டி பலகாரங்கள் உண்டு மகிழ்ந்து பட்டாசுகள் கொளுத்தி ஆனந்தமாக இருப்போம்.( ஐம்பதுகளில் ஐந்து ருபாய் பட்டாசுகளே தீபாவளி மற்றும் கார்த்திகைக்கு போதுமானதாக இருக்கும் ! இன்று கற்பனை செய்ய முடிமா ?)
ஒருமுறை அப்பா யானை வெடியை வவ்வால்களை விரட்ட வீட்டுக்குள் வெடித்தார். அந்த சப்தத்தில் அறுகில்  தூங்கிக்கொண்டிருந்த எங்கள் பாட்டிக்கு ஒரு காது செவிடாகிவிட்டது.
பின்னர் வேலையாட்களும் ஏழைகளும் வருவார்கள். அவர்களுக்கு நல்லெண்ணெய், தீபாவளி பலகாரங்கள் புதிய துணிகள்  எல்லாம் விநியோகிப்போம்.
அப்போதெல்லாம் எங்கள் கிராமத்தில் மின்சாரம் கிடையாது. வானொலிப்பெட்டி கிடையாது .பஞ்சாயத்து அலுவலகத்தில் பேட்டரியில் இயங்கும் ரேடியோ திருச்சி வானொலியை கரகரப்பாக ஒலிபரப்பும்! (இன்று கேபிள் டிவி எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது )
கல்கி ஆனந்த விகடன் தீபாவளி மலர்கள் வரும். அவற்றில் கேலிச்சித்திரங்கள் கதைகள்
படித்து பொழுது போக்குவோம்.
அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் வேண்டாவெறுப்புடன் பள்ளிக்குச்செல்ல டவுனுக்கு புறப்படுவோம்.இரட்டை மாட்டு வில்வண்டியில் பயணம் செய்து இரண்டுமணி நேரத்தில் உளுந்துர்பெட்டை சென்று பஸ் மூலம் பயணத்தைத்தொடர்வோம்